Friday, August 22, 2008

சிபிஎம் புதுச்சேரி மாவட்டசெயற்குழு முடிவுகள்

கட்சியின் பிரதேசகுழுக்கூட்டம் செயற்குழு உறுப்பினர் பெ. உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து விளக்கிப்பேசினார் , கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் விரைந்து துவக்க வேண்டும் . என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.
மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தொடர்ச்சியான நிர்பந்தத்தால் கிராமப்புற மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 100 நாள் வேலையளிக்கக்கூடிய தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005 ல் உருவாக்கப்பட்டது. கிராமப்புற மக்களின் வருமானத்தை உயர்த்துவது, ,வேலைத்தேடி வெளி மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் குடிபெயர்வதை தவிர்ப்பது, மற்றும் கிராமப்புற பொருளாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது .

இத்திட்டம் 2006ல் முதல் கட்டமாக 133 மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டது. 2007 ல் 200 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. 2008 ல் ஏப்ரல் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் அமுல்படுத்த அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரி அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உரிய கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள்; பெருமக்களுக்குள் கடந்த எட்டு மாதகாலமாக நீடிக்கும் பிரச்சனையின் விளைவாக இத்திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பொறுப்பற்றத்தனமான நடைமுறையை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தேசிய ஊரக வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள வட்டார ஊரக வளர்ச்சி முகமை (DRDA)செயல்பாடு நம்பிக்கையளிப்பதாக இல்லை. காரைக்காலில் ஒரு சில கிராமங்களில் ஒரு வாரம் , பத்து நாட்கள் வேலை வழங்கப்பட்டது.அதன் பின்னர் தொடர்ந்து அம்மக்களுக்கு வேலையளிக்கப்படவில்லை. புதுச்சேரி பிராந்தியத்தில் எந்த ஒரு கிராமத்திpலும் இத்திட்டம் துவங்கப்படவில்லை.

ஆகவே, புதுச்சேரி அரசு தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தை புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளுக்கு விரைந்துஅமுல்படுத்தவும் , பருவமழைக்கு முன்னதாக நிலத்தடிநீர் சேமிப்பிற்கு ஏற்ற முறையில் இத்திட்டத்தை பயன்படுத்தவும் வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இப்பிரச்சனையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தாமதித்தால் செப்டம்பரில் மக்களைத் திரட்டி தீவிரமான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும் என எச்சரிக்கிறது.

2.முதியோர் , விதவை பென்ஷன் தொகையை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் வழங்கவும்; வங்கிகள் மூலம் வழங்க மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் விதவை ,முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருகிறது. மேற்படி ஓய்வூதியத் தொகையை வங்கி கள் மூலம் வழங்கப்போவதாக அறியவருகிறது. அதன் வெளிப்பாடாக அங்கன் வாடிகளில் ஓய்வுதிய பயனாளிகளிடம் வங்கிக் கணக்கு துவங்க உரிய ஆவணங்கள் கோரப்படுகிறது.

கடந்த 2007 ஜூலை மாதத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் அரசின் நியாயமற்ற ஒட்டுமொத்த பணி இடமாற்றல் உத்தரவை எதிர்த்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் . அப்போதே ஊழியர்களை அச்சுறுத்த ஓய்வூதியத் தொகையை வங்கிகள் மூலம் வழங்க அரசு முயற்சித்தது. அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இதர ஜனநாயக இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக பல கிராமங்களில் வங்கிகள் இல்லாத நிலமையும், முதியோர்கள் வங்கிகளில் கால்கடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலமையும் ஏற்படும் என்பதை அரசின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் வங்கிகள் மூலம் விதவை, முதியோர் பென்ஷன் வழங்க முயற்சிகள் மேற்கொள்வதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. பயனாளிகளும் இத்தகைய அரசின் முயற்சியை எதிர்க்கிறார்கள். ஆகவே, புதுச்சேரி அங்கன்வாடி மையங்கள் மூலம் தொடர்ந்து முதியோர், விதவை உதவித்தொகையினை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு அரசை வலியுறுத்துகிறது.

No comments: